தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது.இன்றைய கூட்டத்தில் கரூர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
கரூர் மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. அனைவரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாகியது. இறந்துபோனவர்களுக்கு ஆழந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.உறவுகளை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-09-2025 அன்று தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் இதற்கான அனுமதியை கோரி இருந்தார். அவர் அனுமதி கோரிய பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கவில்லை. 25-09-2025 காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு கூட்ட அளவு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை. பிறகு 29-09-2025 அன்று அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமிபுரத்தில் 27-09-2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார்கள். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள்,18 ஆய்வாளர்கள்,75 உதவி ஆய்வாளர்கள்,ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 515 காவலர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப்படை காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அன்றைய தினம் பாதுகாப்பு பணிக்காக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 606 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவல்துறையை பொறுத்தவரை வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கான எண்ணிக்கையை விட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10,000 பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக கூட்டம்வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சி தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்து இருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வர தொடங்கிவிட்டனர். 27-09-2025 அன்று அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்பட்டு 069:25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன்பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது, அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணிநேரம் கழித்து தான் வந்தார். இந்த காலதாமதம் கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இங்கே அனைத்து கட்சி சார்ந்தவர்களும் இருக்கிறீர்கள்.உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கூட்ட ஏற்பாட்டாளர்கள் முக்கியமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை, அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. சம்பவம் நடந்த அதே வேலுச்சாமிபுரத்தில் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக 25-09-2025 அன்று மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் கலந்து கொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடந்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்று இருந்தவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு இருந்தனர். எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12,000 முதல் 15,000 பேர் பங்கேற்று இருக்கிறார்கள். அந்த பரப்புரை கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்கள்,30 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர் என்பதை குறிப்பிட்ட விரும்புகிறேன்.ஆனால் அதற்கு நேர் மாறாக இந்த கட்சியின் நிகழ்ச்சி நடந்துள்ளது.
நிகச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும் கரூர் நகர காவல்துறை உட்கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பிரச்சார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்சயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பே ஒதுக்கப்பட்ட இடத்தில தான் பேசுவோம். என்று பிடிவாதமாக முன்னேறி சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தவெக கட்சியின் இணைச்செயலாளரிடம் பலமுறை தொடர்புகொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும் அவர் தவெக கட்சியின் தலைவர் தனது உரையை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார்.
காவல்துறையின் வழிமுறைகளை மீறி வாகனம் அக்சயா மருத்துவமனையில் இருந்து 30, 35 மீட்டர் சென்ற போது இருபுறமும் உள்ள கூட்டத்தினரை இது நிலைகுலைய செய்தது. இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டு இருக்கிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியிலே பீதி, மூச்சுத்திணறல்,மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.பலரும் கீழே விழுந்து மிதிபட்டு இருக்கிறார்கள். கூட்டத்தின் இரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதியில் நுழைந்து தகர கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள்.இதனால் மின்சாரம் தாக்குவதை தடுக்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்து இருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் காயமடைந்தும்,சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலென்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து இருக்கிறார்கள். இவ்வாறு கூட்டநெரிசல் ஏற்பட்டபோது அவர்களை காப்பாற்ற தான் ஆம்புலென்ஸ் வந்ததே தவிர நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலென்சும் வரவில்லை. காவல்துறை,தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்வர், கரூரில் தவெக கட்சியின் பரப்புரை கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்தவுடன் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது என தெரிவித்தார்.