தமிழ் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விவகாரம் தற்போது பரபரப்பான திருப்பங்களை அடைந்து வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் பல திரைப் பிரபலங்களை நோக்கியும் விரிவடைந்துள்ளது. நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது இந்த வழக்கில் அடுத்த கட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக, அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், கடந்த ஜூன் 29-ஆம் தேதி போதைப்பொருள் விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பிரசாத் பெங்களூரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற நபரிடம் இருந்து கொக்கைன் போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், பிரதீப் குமார், கானா நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான ஜான் என்பவரிடம் இருந்து இந்த போதைப்பொருளைப் பெற்றிருப்பதும் விசாரணையில் அம்பலமானது. போலீசார் ஜானை சென்னையில் வைத்து கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.
“ரோஜாக்கூட்டம்”, “நண்பன்” போன்ற பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்துக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்பு இந்த விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “தீங்கிரை” என்ற படத்தை தயாரித்தபோது பிரசாந்த் மற்றும் ஸ்ரீகாந்துக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் மூலமாகவே, ஸ்ரீகாந்துக்கு பிரசாந்த் போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நடிகர் ஸ்ரீகாந்தின் ஜிபே பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 40 முறைக்கும் மேலாக ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளை வாங்கியுள்ளதும், அதற்காக ரூ. 4.72 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று திடீரென கைது செய்யப்பட்டார்.
நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்:
ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் பழக்கம் உள்ளது என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதில் முதல் பெயராக நடிகர் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. “கழுகு”, “அலிபாபா”, “பண்டிகை” போன்ற படங்களில் நடித்துள்ள கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, நுங்கம்பாக்கம் போலீசார் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள கிருஷ்ணா விரைவில் சென்னை திரும்புவார் என்றும், அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் குமாரின் “பில்லா”, “ஆரம்பம்” போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணா இந்த வழக்கில் சிக்கியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இன்னும் பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.