உலக அளவில் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், தனது சொத்துக்களில் ₹3,400 கோடியை ஏழை மாணவர்களின் கல்விக்கும், இயற்கை பேரிடர் நிவாரணங்களுக்கும் நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இந்த மனிதாபிமான செயல் உலகெங்கும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
‘புரூஸ் லீ’-க்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்தவர் ஜாக்கி சான். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘1985’, ‘போலீஸ் ஸ்டோரி’, ‘டிராகன் மாஸ்டர்’, ‘ரஷ் ஹவர்’, ‘கராத்தே கிட்’ போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படங்கள் உலகளவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் ‘கராத்தே கிட்-2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஜாக்கி சான் தனது சொத்துக்களை நன்கொடையாக அளித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தனது ஜாக்கி சான் சாரிட்டி பவுண்டேஷன் மூலம் ஏழை மக்களின் கல்விக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ₹3,400 கோடி சொத்துக்களை வழங்கியுள்ளார். தனது இந்த முடிவைப் பற்றிப் பேசிய ஜாக்கி சான், “சிறிய வயதில் வறுமையால் நான் துயரப்பட்டேன். அந்த கஷ்டம் எனக்குத் தெரியும். என் நண்பர்கள் மற்றும் சக மனிதர்கள் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவ முடியும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
ஜாக்கி சானின் இந்த அளப்பரிய உதவி, கல்வி மற்றும் சமூக சேவைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அவரது இந்த முன்மாதிரியான செயல், மற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.