புதுடெல்லி: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுச் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு விளக்க ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுக்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சித் தலைமை பரிந்துரைக்காத மூத்த தலைவர் சசி தரூரின் பெயர் இடம் பெற்றுள்ளது காங்கிரஸில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஜம்மு – காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையை மேற்கொண்டதற்கான காரணத்தையும், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விளக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், தூதர்கள் அடங்கிய ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள் இம்மாத இறுதியில் தங்கள் பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழுக்களை வழிநடத்தவும், குழுக்களில் இடம்பெற உள்ள எம்.பி.க்களின் பெயர்களைப் பரிந்துரைக்கவும் மத்திய அரசு முக்கிய அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொண்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழுவைத் தலைமையேற்று நடத்த ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்குமாறு மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, லோக்சபா காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், ராஜ்யசபா எம்.பி. சையது நசீர் உசேன், லோக்சபா எம்.பி. ராஜா பிரார் ஆகிய நான்கு பேர் அடங்கிய பட்டியலை ராகுல் காந்தி தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உறுதிப்படுத்தினார்.
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு – காங்கிரஸில் கொந்தளிப்பு
இந்நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்லும் குழுக்களை வழிநடத்த உள்ளோரின் பட்டியலை மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், பா.ஜ.க. சார்பில் ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் பாண்டா, கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நான்கு குழுக்களுக்குத் தலைமை தாங்குவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மீதமுள்ள மூன்று குழுக்களுக்குக் காங்கிரசின் சசி தரூர், தி.மு.க.வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) சுப்ரியா சுலே ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் கட்சித் தலைமை பரிந்துரைத்த நால்வரில் ஒருவர்கூட பட்டியலில் இடம்பெறாததும், ஆனால் கட்சித் தலைமை பரிந்துரைக்காத, திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் பெயர் இடம் பெற்றதும் அக்கட்சியை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், “மத்திய அரசின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது மத்திய அரசின் நேர்மையற்ற செயல். காங்கிரஸில் இருப்பதற்கும், காங்கிரஸ்காரராக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது” என்று கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு அப்பால் சில நேரங்களில் கருத்து தெரிவிப்பவர் சசி தரூர். சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேயை எதிர்த்துப் போட்டியிட்டவர். விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழா போன்ற நிகழ்வுகளில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றவர். பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துப் பேசியவர். கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமான உறவில் இல்லாதவர் போன்ற பின்னணிகளைக் கொண்ட சசி தரூர், காங்கிரஸ் தலைமை அனுப்பிய பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும், மத்திய அரசு தனது சொந்த முடிவில் சசி தரூரின் பெயரைச் சேர்த்து, சர்வதேச குழுவுக்குத் தலைமை ஏற்க அறிவித்துள்ளது. இது காங்கிரஸின் அதிருப்தி எம்.பி.யை மத்திய அரசு பயன்படுத்தும் உத்தி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள போதிலும், தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக சசி தரூர் அறிவித்துள்ளார். “நம் நாட்டின் கருத்துக்களை உலக நாடுகளுக்கு விளக்கிச் சொல்ல, ஒரு குழுவை வழிநடத்திச் செல்ல, அரசு எனக்கு விடுத்திருக்கும் அழைப்பானது கவுரவம் அளிக்கிறது. தேசிய நலன் சார்ந்து என் சேவை தேவைப்படும் என்றால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சசி தரூரின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.