ஸ்டாலின், உதயநிதியை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது எனக் கூறியவர் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு என மதிமுக எம்.பி.துரை வைகோ கூறினார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொன்மலை ஜி கார்னர் திட்டத்துக்காக ரயில்வே துறை சார்பில் சுமார் 8 ஏக்கர் நிலமும், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.95 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வது தமிழகத்துக்கு சர்வதேச அளவில் பெரும் சுற்றுலா ஈர்ப்பையும், முதலீடுகளையும் பெற்றுத் தரும். மக்களவைத் தேர்தலில் என்னை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுகவினர் அழுத்தம் கொடுத்தனர்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு நான் கருப்பு சட்டை அணிந்து வந்தபோது, அந்த சட்டையை கழற்றி விட்டு வரக் கூறி திமுகவினர் வற்புறுத்தினர். எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் விதமாகவும், என்னை அவமானப்படுத்தும் விதமாகவும் செயல்பட்டனர்.
நான் திமுகவில் சேர விரும்பியதாக ஒரு கட்டுக்கதையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியிருக்கிறார். கருணாநிதியுடன் அரசியல் முடிந்து விட்டதாகவும், ஸ்டாலின், உதயநிதியை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது எனவும் சொன்னவர் தான் கே.என்.நேரு. இவ்வாறு கூறினார்.
தனது தந்தை வைகோ கோபக்காரராக இருப்பதால், கட்சி நடத்த முடியாது எனவும், இதனால், திமுகவில் சேர்ந்துவிடுவதாகவும் கூறியவர் தான் துரை வைகோ என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக ஸ்டாலின், உதயநிதியை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என கே.என்.நேரு கூறியிருந்ததாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

