‘மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, இயக்குநர் பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான தேனியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.2.50 கோடியில் நிறுவப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

