தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 12-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Priya
3 Views
1 Min Read

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா கடலோர பகுதியில், பாலசோர் பகுதிக்கு அருகில் நேற்று கரையை கடந்தது.

தமிழகத்தில் நாளையும் (ஜூலை 7), நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

9 முதல் 12-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

மத்திய வங்கக் கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் 3 செமீ, மேல் கூடலூர், குன்னூர், செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், பார்வூட் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply