இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று, அவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பாக்யராஜின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பாக்யராஜ் உடலுக்கு திரை உலகத்தினர் பெருந்திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள், பாக்யராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய், பாக்யராஜின் நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதோடு, பாக்யராஜின் மகன் சாந்தனுவை ஆரத் தழுவி ஆறுதல் கூறினார். மேலும், பாக்யராஜின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

