“தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல், இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு கடன் கிடைக்குமா?” என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடி, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட 3 பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடி என மொத்தக் கடன் குறைந்தது ரூ.13.18 லட்சம் கோடியாகவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35 % வட்டிக்கு செலவிடப்படுவதாகவும் அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் எந்த வகையிலும் வியப்பளிக்கவில்லை.
2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் நிதி நிலை மோசமடைந்து வந்தது குறித்தும், கடன் தொகை அதிகரித்து வருவது குறித்தும் பாமக கடந்த ஐந்தாண்டுகளில் அறிக்கைகள், நிழல் நிதி நிலை அறிக்கைகள், உத்தேசப் பொருளாதார ஆய்வறிக்கைகள் ஆகியவற்றில் தெரிவித்து வந்த தரவுகள் தான் இப்போது அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் நிதி நிலைச் சீரழிவுகள் குறித்து கடந்த காலங்களில் பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசுகள் பொறுப்பேற்கும் போது நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதை மிகவும் ஆரோக்கியமானப் போக்காகவே பாமக கருதுகிறது. நமது நிதி நிலை என்னவாக இருக்கிறது ? என்பதை தெரிந்து கொண்டால் தான், அதை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் ? என்பதற்கான திட்டங்களை வகுக்க முடியும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையை பாமக வரவேற்கிறது. ஆனால், இதை தமிழகத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், கடன் சுமையை குறைப்பதற்குமான அடித்தளமாகத் தான் புதிய அரசு பயன்படுத்த வேண்டுமே தவிர, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுவதற்கான கருவியாக பயன்படுத்தக் கூடாது.
தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு முக்கிய உண்மைகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக அரசின் வருவாய் அதிகரிக்கவில்லை; மாறாக குறைந்திருக்கிறது என்பதும், மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் ஊதியம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி ஆகிய பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகளின் மதிப்பு 61.70% ஆக அதிகரித்துள்ளது; மராட்டியம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இது 50 % க்கும் குறைவாகவே உள்ளது என்பதும் ஆகும்.
இந்த தரவுகள் உண்மை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த நிதி நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்கான செயல் திட்டம், காலவரையறை உள்ளிட்டவற்றை தவெக அரசு அறிவிக்க வேண்டும்.
மராட்டிய மாநிலத்தில் அதன் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் பங்கு கடந்த ஐந்தாண்டுகளில் 1 % அதிகரித்திருக்கிறது; கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் குறையாமல் நிலையாக இருக்கிறது; ஆனால், தமிழ்நாட்டில் இந்த விகிதம் 5.93 விழுக்காட்டில் இருந்து 5.45 % ஆக குறைந்திருக்கிறது. இதற்கான காரணங்களில் முதன்மையானது சரக்கு மற்றும் சேவை வரிகள் சரியாக வசூலிக்கப்படாதது தான். தமிழ்நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி கணக்கு தாக்கல் செய்யும் தொழில், வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 11.40 லட்சமாக இருக்கும் நிலையில், ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டுகள் வரை, இவற்றில் 28.50 % அதாவது 3.25 லட்சம் நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை; மேலும் 17 %, அதாவது 1.94 லட்சம் நிறுவனங்கள் தலா ரூ.1,000-க்கும் குறைவாகவே வரி செலுத்தியுள்ளன. இப்போதும் கிட்டத்தட்ட இதே நிலை தான் தொடர்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து, ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. இந்த நிலையை புதிய அரசு எவ்வாறு மாற்றப் போகிறது ?
வருவாயைப் பெருக்குவதை விட பெரும் சவால் செலவுகளைக் கட்டுப்படுத்துவது தான். 2026- 27ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் படி அரசின் மொத்த வருவாய் வரவு ரூ.3 லட்சத்து 44,575 கோடி ஆகும். அதில் ஊதியம் ரூ.94,377.56 கோடி, ஓய்வூதியம் ரூ.45,323.17 கோடி, கடனுக்கான வட்டி ரூ.78,677.29 கோடி ஆகிய பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகள் மற்றும் ரூ.18,735.42 கோடி பிற செலவுகளை சேர்த்தாலே ரூ.2 லட்சத்து 37,113.44 கோடி வருகிறது.
இதில் ஒரு ரூபாயைக் கூட குறைக்க முடியாது. இதுதவிர இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கான செலவு ரூ. ஒரு லட்சத்து 56,108.41 கோடியை சேர்த்தால் அரசின் வருவாய் செலவுகள் மட்டுமே ரூ.3 லட்சத்து 93,221.85 கோடியாக அதிகரிக்கும். இதை சமாளிக்கவே ரூ.48,646.54 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். மூலதன செலவு ரூ.73,270 கோடியையும் சேர்த்தால் நிதிப் பற்றாக்குறை ரூ.ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 916 கோடியாக உயரக்கூடும்.
ஆனால், திமுக அரசு சில செலவுகளை குறைத்து, வரவுகளை உயர்த்திக் காட்டியிருப்பதாக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.1.33 லட்சம் கோடியாகவும் இருக்கும் என புதிய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சமாளிக்கவும், ஏற்கனவே வாங்கிய கடனில் ரூ.60,413.42 கோடியை அடைக்கவும் 2026- 27ம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவை தவிர தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற குறைந்தது ரூ 1 லட்சம் கோடியாவது தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு கடன் கிடைக்குமா ? இந்த நிலைமையை தவெக அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது ? மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது ? என்பதற்கான செயல் திட்டத்தை தவெக அரசு அறிவிக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

