“சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா சி.எம் சார்?” – விஜய் மீது உதயநிதி சாடல்

Priya
100 Views
1 Min Read

“சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா? நீங்கள் டைம் எடுத்து கற்றுக் கொண்டு வந்து சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது சி.எம் சார்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியாக நடக்கும் குற்றச் சம்பவங்களை பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு இருக்கிறதா, இல்லையா என மக்களுக்கு சந்தேகம் வருகிறது.

இந்த சோஃபா மாடல் (Sofa Model) அரசு அமைந்தது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமை என இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் பக்கம் பக்கமாக பேப்பர் வைத்து, சட்டம் – ஒழுங்கு பற்றி வாய்கிழிய பஞ்ச் டயலாக் பேசியவர், முதல்வர் ஆனதும் ‘டீப் ஸ்லீப் மோடு’க்கு சென்றுவிட்டார்.

பெண்கள் பாதுகாப்புக்காக நீங்கள் அறிவித்த சிங்கப் பெண்கள் படையின் தொடக்க விழாவை, கடைசி நேரத்தில் ரத்து செய்திருக்கிறீர்கள். நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளீர்களா அல்லது அந்த முயற்சியையே தள்ளி வைத்துவிட்டீர்களா என மக்கள் கேட்கிறார்கள்.

சிங்கப்பெண் படை என பெயரையும், சீருடையையும் மாற்றுவதுதான் மாற்றமா? இல்லை. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா? நீங்கள் டைம் எடுத்து கற்றுக் கொண்டு வந்து சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது சி.எம் சார்” என்று உதயநிதி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply