வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 290 பேருந்துகளும், நாளை 595 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 650 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அலுவலர்கள் நியமனம்
இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 6,022 பயணிகளும், வெள்ளிக்கிழமை 10,791 பயணிகளும், சனிக்கிழமை 7,761 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 1,06,450 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

