அநியாயத்திற்கு எதிராக கடவுள் நேரில் வந்து போராடினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை மாஸ் ஆக்ஷன் கதையாக சொல்லும் படம் தான் கருப்பு. நீதிமன்றம், காவல்துறை, அரசியல் என அனைத்தும் பணத்தின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கிடக்கும் ஒரு சமூகத்தில், சாதாரண மனிதர்களுக்கு நீதி கிடைக்காமல் போகும் சூழலை இந்த படம் பேசுகிறது.
தன் மகளின் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் மலையாளி இந்திரன்ஸ், ஒரு கட்டத்தில் தவறுதலாக 60 பவுன் நகையை இழந்து விடுகிறார். போலீசில் புகார் அளித்த பிறகும் அவருக்கு முழு நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்தை நாடினாலும், பணம் பறிக்கும் வக்கீலான ஆர்.ஜே பாலாஜியின் வலையில் சிக்கிக் கொள்கிறார். வழக்கு நீள நீளமாக போக, மகளின் சிகிச்சையும் பாதிக்கப்படுகிறது. இறுதியில் மகளையே இழக்கும் நிலை உருவாகிறது. மனவேதனையில் இருக்கும் இந்திரன்ஸ், கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பசாமியிடம் ஆவேசமாக முறையிடுகிறார். அதன் பிறகு கருப்பசாமி மனித உருவில் வந்து நீதிக்காக போராடுகிறாரா என்பதே படத்தின் மையக்கதை.
படத்தின் பெரிய ஆச்சரியம் ஆர்.ஜே பாலாஜி. இதுவரை நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளுடன் நடித்தவர், இதில் முழுக்க எதிர்மறை நிழலில் தோன்றுகிறார். அதிகாரம், பணம், நீதிமன்ற அரசியல் ஆகியவற்றை பயன்படுத்தி மனிதர்களை ஏமாற்றும் வக்கீலாக அவர் நடித்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஆரம்பத்தில் புதிதாக தோன்றினாலும், கதை நகர நகர அந்த கதாபாத்திரத்தில் அவர் பொருந்தி விடுகிறார். குறிப்பாக சூர்யாவுடன் மோதும் காட்சிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
ஆனால் படத்தின் மிகப்பெரிய பலம் சூர்யாதான். படம் தொடங்கி அரை மணி நேரத்திற்கு பிறகுதான் அவர் வருகிறார். இருந்தாலும் வந்த பிறகு முழுப் படத்தையும் தனது திரைநிலையால் ஆக்கிரமித்துவிடுகிறார். அமைதியான மனிதராக இருந்து கருப்பசாமியாக மாறும் தருணங்கள், சண்டைக் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷம், கண் பார்வை, உடல் மொழி என ரசிகர்களை கவரும் வகையில் நடித்திருக்கிறார். குறிப்பாக இடைவேளைக் காட்சியும் கிளைமாக்ஸ் சண்டைகளும் திரையரங்கில் கொண்டாட்டமாக மாறும் வகையில் அமைந்துள்ளன.
திரிஷா வழக்கறிஞராக வந்து கதைக்கு மென்மையான பகுதியை கொடுக்கிறார். சூர்யாவுடன் வரும் காட்சிகள் படத்தின் கனத்தை சற்று குறைக்க உதவுகின்றன. அதேபோல் நீதிபதியாக வரும் நட்டி நடராஜ் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி முழுக்க சென்டிமென்ட், நீதிமன்ற அரசியல், மோசடி போன்ற விஷயங்களுடன் நகர்கிறது. இந்திரன்ஸ் மற்றும் அவரது மகள் தொடர்பான காட்சிகள் உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. இரண்டாம் பாதியில் படம் முழுக்க மாஸ் ஆக்ஷன் உலகமாக மாறுகிறது. சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், கிளைமாக்ஸ் அதனை மறக்க வைக்கிறது.
சாய் அபயங்கரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக கருப்பசாமி தொடர்பான காட்சிகளில் இசை திரையரங்கை அதிர வைக்கும் வகையில் இருக்கிறது. பாடல்களை விட பின்னணி இசை அதிகம் கவனம் பெறுகிறது. ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும், எடிட்டிங்கும் படத்தின் மாஸ் உணர்வை உயர்த்துகின்றன.
நீதிமன்றத்திற்கு வருவதே தண்டனையாக மாறிவிட்டது என்ற கருத்தை படம் அழுத்தமாக சொல்கிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, துன்ப நேரத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் கடவுள் வந்து உதவுவார் என்ற நம்பிக்கையை இந்த படம் வணிக ரீதியில் சொல்ல முயற்சித்திருக்கிறது. மாஸ் ரசிகர்கள், குடும்ப ரசிகர்கள், குறிப்பாக சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் கருப்பு உருவாகியுள்ளது.
கருப்பு – சினிமா விமர்சனம்

Leave a Comment
