தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு (Commercial LPG) தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஹோட்டல்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மற்றும் வெளியூர் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விநியோகம் சீராக இல்லாததால், பல உணவகங்கள் கூடுதல் விலைக்கு எரிவாயுவை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் கூடுதல் செலவினத்தைச் சமாளிக்கவே, உணவுகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போது டிபன், மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், “எரிவாயு விநியோகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, தட்டுப்பாடின்றி கேஸ் கிடைக்கத் தொடங்கினால், உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைக்கத் தயாராக இருக்கிறோம்” என ஓட்டல்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இந்த உணவு விலை உயர்வு சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

