இலங்கையின் வடபகுதியில் நடைபெறும் உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஒரு சாதாரண தமிழ் குடும்பத்தின் வாழ்வில் நிகழும் அசாதாரணமான இரவை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் “நீளிரா”.
திருமண மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் ஒரு வீட்டில் திடீரென இந்திய அமைதிப்படை தஞ்சமடைவதும், அதைத் தொடர்ந்து போராளிகளும் அந்த வீட்டைச் சுற்றிவளைக்கத் தொடங்குவதும் கதையை பதட்டத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் யதார்த்தமான அணுகுமுறையே. இலங்கை பின்னணியில் பல படங்கள் வந்திருந்தாலும், போரின் மத்தியில் சிக்கிய பொதுமக்களின் உணர்வுகளையும், அவர்களின் அச்சத்தையும் இவ்வளவு நெருக்கமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, ராணுவ வீரர்களும், குடும்பத்தினரும் இடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் பல சிக்கலான அரசியல் மற்றும் மனிதாபிமான கோணங்களை இயக்குநர் எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
நவீன் சந்திரா அமைதிப்படை தலைவராக கம்பீரத்தையும், மனிதநேயத்தையும் சமநிலையுடன் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். ஒரு பக்கம் கடமை, மற்றொரு பக்கம் நிரபராதிகளின் உயிர் — இந்த இரண்டிற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் அவரது நடிப்பு நினைவில் நிற்கிறது.
திருமண பெண்ணாக ரூபா கொடுவாயூர், போரின் நடுவே சிக்கிய ஒரு பெண்ணின் பயம், குழப்பம், வேதனை ஆகியவற்றை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார். துணை நடிகர்களும் இயல்பான நடிப்பால் காட்சிகளுக்கு வலு சேர்க்கின்றனர்.
“போர் அமைதிக்காக” என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்கும் வசனங்களும், “துப்பாக்கியால் அமைதி வராது” என்ற உணர்வுகளும் மனதைத் தொடுகின்றன. தேவையற்ற காட்சிகளால் நீட்டிக்காமல், சுருக்கமாகவும் தாக்கமுள்ள முறையிலும் கதையை சொல்லியிருப்பது சிறப்பு. எனினும், சில இடங்களில் நாடகத் தன்மையை குறைத்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் காட்சிகளின் உணர்வை மேலும் உயர்த்துகின்றன. மொத்தத்தில், “நீளிரா” என்பது போரின் அரசியல் அல்ல, அதன் நடுவே சிக்கிய மனிதர்களின் வலியை உணர்த்தும் ஒரு மனதை நெருடும் அனுபவமாக திகழ்கிறது.

