உத்தரகாண்டில் தொடர் மேகவெடிப்பு: வெள்ளப்பெருக்கால் 8 பேர் மாயம், பல கிராமங்கள் துண்டிப்பு!

உத்தரகாண்டில் கனமழை, மேகவெடிப்பு: பெரும் சேதம் மற்றும் உயிர் இழப்புகள்.

By
Priyadharshini
Priyadharshini is a dedicated Tamil news journalist known for her clear, factual, and engaging reporting. She covers a wide range of topics including politics, society, cinema,...
86 Views
2 Min Read
Highlights
  • உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேகவெடிப்பு.
  • மேகவெடிப்பின் காரணமாக இதுவரை 8 பேர் மாயம், பல சாலைகள் துண்டிப்பு
  • மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதி.

வட மாநிலங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால், இமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இந்த சூழலில், உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பின் காரணமாக, குறைந்தது 8 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகவெடிப்பு காரணமாக பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், சிலருடைய வீட்டு விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேகவெடிப்பின் தீவிரமான தாக்கத்தால், அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள லாவாரா கிராமத்தில், மோட்டார் சாலையில் இருந்த ஒரு பாலம் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், ருத்ரபிரயாகையில் உள்ள ஒரு முக்கிய அனுமன் கோயிலும் நீரில் மூழ்கியுள்ளது. ஹல்த்வானியில் உள்ள ராணி பாக் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவால், ஹல்த்வானி-பீம்தால் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளும், அரசின் நடவடிக்கைகளும்

இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது சமூக வலைத்தளத்தில், “ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு குறித்து வருத்தமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் சிக்கிய குடும்பங்களை மீட்க, உள்ளூர் நிர்வாகத்தின் தலைமையில் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலைமை குறித்து அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

கனமழையின் தாக்கம் காரணமாக, ருத்ரபிரயாக், பாகேஷ்வர், சாமோலி, ஹரித்வார், மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பின் தாக்கம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேகவெடிப்பு என்றால் என்ன?

மேகவெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக மழை பொழியும் ஒரு இயற்கை நிகழ்வு. பொதுவாக, 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால், அது மேகவெடிப்பு என வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்படும்.

பருவமழை காலங்களில், மேகங்கள் கனமான நீர் துளிகளுடன் நகரும்போது, தரையிலிருந்து வரும் சூடான காற்று, அந்த மழைத்துளிகள் கீழே விழாமல் தடுக்கும். இந்த நீர்த் துளிகள் மேகத்திற்குள்ளேயே அழுத்தம் கொடுத்து, ஒரு கட்டத்தில் மொத்தமாக வெளியேறும். இதனால், மழைத் துளிகளாக அல்லாமல், நீர் அருவி போல கொட்டும். அதன் வேகம் மற்றும் வீரியம் மிக அதிகமாக இருக்கும். இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு, கடுமையான நிலச்சரிவு மற்றும் மின்னல் போன்றவை ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படும்.

மேகவெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் இந்தியாவில் நிகழ்கின்றன. இத்தகைய மேகவெடிப்புகள் எப்போது, எங்கு நிகழும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவது சாத்தியமில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த மாத தொடக்கத்திலும் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Priyadharshini is a dedicated Tamil news journalist known for her clear, factual, and engaging reporting. She covers a wide range of topics including politics, society, cinema, and everyday developments that matter to readers. Her journalism reflects professionalism, responsibility, and a commitment to truth.
Leave a Comment

Leave a Reply