தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று ( 22-10-2025 ) தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( 23-10-2025 ) காலை 05:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து வடதமிழக உட்பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை 08:30 மணியளவில் தெற்கு உள் கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவ கூடும்.
நேற்று ( 22-10-2025 ) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( 23-10-2025 ) காலை 08:30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகர கூடும்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று ( 22-10-2025 ) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று ( 23-10-2025 ) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.இதன் காரணமாக ( 24-10-2025 ) அன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அதற்கடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.
நாளை ( 24-10-2025 ) 14 மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக நாளை ( 24-10-2025 ) தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

