தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 19-ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் எனப்படும் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். பின்னர் தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்புக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் வாக்கு சதவீதத்தில் குளறுபடியா? என கேள்வி எழுந்தது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு சதவீதம் குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
“செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் சில குளறுபடிகள் நடைபெற்றன. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை எனக் கூறி, ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது.
தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் கால தாமதம் ஆகும். அதன் காரணமாகவே செயலி மூலமாக மீடியாவுக்கு அப்டேட் செய்தோம். திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நிலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்ட எல்லை பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
தமிழ்நாட்டில், எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு கேட்டு கோரிக்கை வைக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.