கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி, தவெக கட்சி நடத்திய பிரச்சார கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பலியாகினர். இந்த நிகழ்விற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்து இருந்தார்.மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இருப்பினும் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விரைவில் தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தவெக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர், லயோலா மணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
” வந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன். கரூர் செல்வதற்கு இந்த நிமிடம் வரை முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற தகவல்.ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.பல இடங்களில் அனுமதி கேட்டுள்ளார்கள். காலையில் அனுமதி என்று சொல்கிறார்கள். மாலை அனுமதி மறுப்பு என்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் உணர்வுப் பூர்வமாக மனம் விட்டு நீண்ட நேரம் பேச வேண்டும் என்று திட்டம் வகுத்து வேலை செய்து வருகிறார்கள். அந்த சூழலை தடுக்க பல வழிகளில் தடை செய்து வருகிறார்கள். இடம் கொடுத்தவர்களையும் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களும் கரூரில் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், வேறு எங்கு சரியான இடம் கிடைத்தாலும் சந்திக்க வருகிறோம் என்று மக்களும் தெரிவித்து உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. சந்திக்கும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு சூழல் நிறைந்த இடத்தை தேடி வருகிறார்கள்.
சென்னை உட்பட ஏனைய எந்த மாவட்டத்தில் இடம் கிடைத்தாலும் உள்ள உணர்வோடு மக்களை சந்தித்து விட வேண்டும் என்று வீரியமாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் இடம் தேடும் பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறார்கள். கரூரில் மக்களை சந்திக்கும் பாதுகாப்பு சூழல் தற்பொழுது வரை இல்லை என்று சொல்லப்படுகிறது.
கரூரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடம் கொடுத்துள்ளார்கள். அந்த இடம் மக்கள் சந்திப்பை நடத்த கூடிய உகந்த இடமாக இல்லை. சிறிய இடமாக உள்ளது. 6 மணி நேரம் மக்கள் சந்திப்பை நடத்த கூடிய இடமாக இல்லை.அந்த இடத்தில் மக்களை சந்திக்க முடியாத நிலை என்று தகவல். மக்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். எந்த பிரச்சனையும் யாருக்கும் நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
பலரின் அழுத்தம் சொல்ல முடியாத துயரத்தை தருவதாக தகவல் வருகிறது. கரூர் மக்களை சந்தித்து விடக் கூடாது என்று பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மனது விட்டு பேச வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள்.
கரூர் மட்டுமில்லாமல் திருச்சி, நாமக்கல் என்று பல மாவட்டங்களில் இடம் கிடைத்தாலும் அனுமதி கிடைப்பதில்லை. அனுமதி கிடைத்தாலும் சரியான இடம் கிடைக்கவில்லை. காலம் தாழ்த்த கூடாது. கூடுமானவரை விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துவிட்டு அடுத்த கட்ட மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என்று வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
பிரச்சனை இல்லாத பாதுகாப்பு சூழல் நிறைந்த சரியான இடம் கிடைத்த உடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க கூடிய நேரம், இடம் ஆகியவற்றை தலைமை சார்பாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வரும் என்ற தகவல் எனக்கு வந்தது.
சென்னையை தாண்டி வேறு எங்கேனும் ஒரு இடத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு நடந்து வருவதாக தகவல்.
சட்ட விதி முறைகளின் படி இந்த சந்திப்பு நிகழ்வை நடத்த வேண்டும் என்று பொறுப்புணர்வுடன் ஆலோசித்து வருகிறார்கள் என்ற தகவல். நல்லதே நடக்கும்” என தெரிவித்துள்ளார்.

