ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல் – கவின் கொலையில் நீதி கோரிக்கை

கவின் ஆணவக் கொலை: நீதி கோரி திருமாவளவன் வலியுறுத்தல், ஆணவக் கொலை சட்டத்திற்கு உடனடி தேவை.

parvathi
1720 Views
2 Min Read
2 Min Read
Highlights
  • தூத்துக்குடி கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
  • ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்ற திருமாவளவன் வலியுறுத்தல்.
  • கொலையாளியின் பெற்றோர் காவல்துறை அதிகாரிகள், அவர்கள் மீது நடவடிக்கை கோரிக்கை.
  • தென்மாவட்டங்களில் சாதி ஆணவக் கொலைகள் அதிகரிப்பது குறித்து கவலை.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர சம்பவத்தைக் கண்டித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கவினும், சுபாஷினி என்ற பெண்ணும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் சுபாஷினியின் பெற்றோருக்குத் தெரிந்ததும், அவர்கள் கவின் மற்றும் அவரது பெற்றோரை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால் கவினின் பெற்றோர் தங்கள் மகனைக் கண்டித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின், திருச்செந்தூரில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த தனது தாத்தாவை பார்ப்பதற்காக சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

திருநெல்வேலியில் சித்த மருத்துவராகப் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் தனது தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில், சுபாஷினியை ஆலோசனை பெறுவதற்காக கவின் தனது தாயுடனும் மாமாவுடனும் அந்த சிகிச்சை மையத்திற்குச் சென்றுள்ளார். சிகிச்சை மையத்தின் உள்ளே கவினின் தாயும் மாமாவும் சுபாஷினியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், தனது வீட்டு வாசலில் வைத்து கவினை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இக்கொடூர கொலை தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறையில் பணியாற்றும் சுபாஷினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாகக் கைது செய்து, காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும், அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தென்மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறிக் கொலைகள் மற்றும் சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனையளிப்பதாகவும், ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
Ad image

இந்திய சட்ட ஆணையம் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். கவின் செல்வகணேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆணவக் கொலைச் சம்பவம் தமிழகத்தில் சாதி ஆணவம் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையும், அதைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்பதையும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply