SIR: “தமிழ்நாட்டில் உள்ள 6.36 கோடி வாக்காளர்களை 30 நாட்களில் எப்படி சரிபார்க்க முடியும்?” – தவெக தலைவர் விஜய் கேள்வி!

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist committed to delivering timely, accurate, and people-focused stories. With expertise across politics, social issues, cinema, and public affairs, he...
78 Views
3 Min Read

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ( SIR ) நவம்பர் 4- ஆம் தேதி முதல் துவங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

” தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து, அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம். அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?

இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக. பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது. எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சில ஆலோசனைகளை முன்வைக்கிறது.

1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.

4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.

6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில், எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.

நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதே சமயம், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.

அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க.. இதுகுறித்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?” என அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist committed to delivering timely, accurate, and people-focused stories. With expertise across politics, social issues, cinema, and public affairs, he blends facts with insight to create journalism that informs, engages, and inspires. Known for his clear writing and authentic storytelling, Surya believes in truth-driven, responsible reporting that empowers readers and strengthens public understanding. His mission is to make news accessible, credible, and impactful for every Tamil reader.
Leave a Comment

Leave a Reply