ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, 1964 புயலுக்குப் பிறகு தற்போது முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. ஆங்கிலேயர் கால தேவாலயம், ரயில் நிலையம், தபால் நிலையம் போன்ற நினைவுச்சின்னங்களையும், அரிச்சல்முனை கடற்கரை, கலங்கரை விளக்கத்தையும் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் எளிதாக்கவும் தமிழக சுற்றுலாத் துறை புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தனுஷ்கோடியில் சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் சுற்றுலா ஹெலிபேட் தளம் அமைக்கப்படவுள்ளது. இது தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.