நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும் இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர் .

சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. முன்னதாக தேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்ற போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பணி நடைபெற்றது. இதனை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அப்படையில் குறிப்பிட்ட ரயில் கோச்சில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பணத்தை கொண்டு சென்ற சதீஷ் (33) நவீன் (31) பெருமாள் (25) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும் இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர் . இதனையடுத்து வருமான வரித்துறையினரிடம் பணம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரூவூலத்தில் பணம் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அந்த பரிந்துரையை ஏற்ற டிஜிபி, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்ற பிறகு சிபிசிஐடி விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here