தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது சம்மன் அனுப்பிய நிலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
“மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க என்னை குறிவைத்து செயல்படுகின்றனர். இதனை அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் கைப்பற்றியுள்ளார்கள்.
ஆனால், ரூ.4 கோடியை யாரோ எங்கோ கொண்டு சென்றதில் எனது பெயரையும் சேர்த்து சூழ்ச்சி செய்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்திலேயே சொல்லிவிட்டேன். இது என்னுடைய பணம் அல்ல. அந்தப் பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான். யாரையும் இதில் குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறை தன் கடமையை செய்கிறது. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டத்தை நாம் மதிக்க வேண்டும்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வழக்கமாக காவல்துறை மிரட்டி வாக்குமூலம் வாங்கும். விசாரணைக்கு ஆஜரான பிறகே என்ன வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்பது தெரியும். யார் மீதும் அவதூறு வழக்கு தொடரப்போவதில்லை. இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க முடியாது. இந்த வழக்கால் எனக்கு விளம்பரம் தான் கிடைத்து வருகிறது.
யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பாதையில் பாஜக சென்று கொண்டிருக்கிறது. நிறைய இடங்களில் பாஜக வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது வெளிமாநிலங்களுக்கு பிரச்சாரம் செல்லவுள்ளேன். எனவே, கூடிய விரைவில் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன்” என்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.