ஒவ்வொரு வருஷமும் அட்வைஸ் பண்ணிகிட்டு இருந்தா நல்லா இருக்காது – கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு.

மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பறவைபோல் சிறகு விரித்துப் பறந்து செல்லுங்கள் - மாணவர்களுக்கு விஜய் அறிவுரை.

ansar
3780 Views
3 Min Read
3 Min Read
Highlights
  • நீட் மட்டுமே உலகமா? அதைத் தாண்டியும் உலகம் பெரியது!
  • ஊழலற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • சாதிமத பிரிவினை சிந்தனைக்கு உள்ளாகாதீர்கள்.
  • போதைப் பொருட்கள் போல சாதியை தூரமாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
  • சமீபத்தில் தந்தை பெரியாருக்கும் சாதி சாயம் பூசப்பார்த்தார்கள்

30.05.2024, மாமல்லபுரம், செங்கல்பட்டு : 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருது வழங்கும் விழா நடத்தி வருகிறார். அதன்படி, இந்த அண்டு மாமல்லபுரத்தில் மூன்றாமாண்டு விழா நடைபெற்றது.

விருது வழங்கும் விழாவில் விஜய் பேசும் அரசியல் ஒவ்வோர் ஆண்டும் வைரல் ஆகும். இன்றும் அவர் அரசியல் பேசி உள்ளார். ஆனால் அதன் சாராம்சம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பேசிய உரையின் தொகுப்பாகவே இருந்தது. மேலும் சுருக்கமாகவும் தனது உரையை முடித்துக் கொண்ட அவர், அடுத்து வருபவர்களுக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன், ஒவ்வோராண்டும் திரும்பத்திரும்ப அறிவுரை சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கும்விழாவில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சம் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பது. மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வாக்குக்குப் பணம் வாங்கக்கூடாது என வலியுறுத்துவதோடு சரியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விஜய் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

2024 ல் விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக அவர் வலுவான கண்டனங்களைப் பதிவு செய்ததோடு, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தையும் ஆதரித்து பாராட்டு தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் இவ்வாண்டு, நீட் தேர்வு குறித்தும், வாக்குக்குப் பணம் வாங்க வேண்டாம் என்றும் கடந்த கால உரைகளை அவர் தொகுத்துப் பேசியுள்ளார்.

இன்று விஜய் பேசிய உரையின் முக்கிய அம்சங்கள்:

  • படிப்பு சாதனைதான். ஆனால் ஒரே ஒரு படிப்பில் சாதிப்பது மட்டும் சாதனையல்ல
  • நீட் மட்டுமே உலகமா? அதைத் தாண்டியும் உலகம் பெரியது!
  • ஜனநாயகம் மிகவும் முக்கியம். ஜனநாகயம் இருந்தால் தான் உலகம் சுதந்திரமாக இருக்க முடியும்.
  • ஜனநாயகம் இருந்தால் தான் எல்லார்க்கும் எல்லாம் சமமாக கிடைக்கும்.
  • ஜனநாயகக் கடமையை அனைவரும் ஒழுங்காக செய்ய வேண்டும் .
  • ஊழலற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இன்னும் சில மாதங்களில் தேர்தலை முன்னிட்டு வண்டி வண்டியாக பணத்தைக் கொட்டப் போகிறார்கள்
  • அது அனைத்தும் நம்மிடம் இருந்து மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்.
  • என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.
  • குழந்தைகளுக்குப் பிடித்ததை அறிந்து கொண்டு அவர்களை வழிநடத்துங்கள்.
  • சாதிமத பிரிவினை சிந்தனைக்கு உள்ளாகாதீர்கள்.
  • விவசாயிகள், வியாபாரிகள் சாதி பார்த்து உழைப்பதில்லை.
  • மழை, வெயில் போன்ற இயற்கை அம்சங்களில் சாதியில்லை.
  • போதைப் பொருட்கள் போல சாதியை தூரமாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
  • சமீபத்தில் தந்தை பெரியாருக்கும் சாதி சாயம் பூசப்பார்த்தார்கள்
  • மத்திய அரசு போட்டித்தேர்வில் பெரியார் பெயரை சாதியோடு பயன்படுத்தியதற்கு வன்மையான கண்டனம்.
  • நாட்டு நடப்புகளை சரியான முறையில் அணுகி சிந்தித்து செயல்பட வேண்டும்.
  • செயற்கை நுண்ணறிவு AI – தான் உலகை எதிர்கொள்ள ஒரே வழி.
  • “SKY IS VAST AND WIDE AND YOU HAVE STRONG WINGS. SO FEEL FREE TO FLY LIKE A BIRD WITH COURAGE, CONVICTED AND CONFIDENCE”
  • வானம் பரந்து விரிந்தது. உன்னிடம் வலுவான சிறகுகள் உள்ளன. அதனால் தயக்கமின்றி பறவைபோல் தைரியமாக, தீர்க்கமான முடிவுடன் நம்பிக்கையோடு பறந்து செல்.

விஜய் சுருக்கமாக இந்த உரையாற்றியதோடு ஜனநாயகம் என்கிற சொல்லை பலமுறை பயன்படுத்தியுள்ளார். மூன்றாண்டுகளில் 2000 மாணவர்களுக்கு மேல் விஜயிடம் இருந்து விருது பெற்றுள்ளனர். இது மாணவர்கள் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்த்தி உள்ளது. மேலும் மாணவர்கள் வாயிலாக அவரது குடும்பத்தையும் தன் பக்கம் ஈர்க்கவே, ஊழலற்றவர்களை பார்த்து தேர்ந்தெடுக்க பெற்றோரை வலியுறுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் விருது பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதன்முறை வாக்களிக்க தகுதி பெறுவார்கள். எனவே விஜய் சரியான வழியில் தனது அரசியல் பாதையை கட்டமைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதே நேரம் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்படுத்துவதன் விளைவுகளை அறிந்தே அரசு அந்த முறையை மாற்றியுள்ள நிலையில், விஜய் நடத்தும் விருது விழா சர்ச்சைகளை கிளப்பியுள்ளதையும் மறுப்பதற்கு இல்லை. மீண்டும் விஜய் முதலில் சொன்னதை நினைவு கூர்வோம். “ ஒரேஒரு படிப்பில் மட்டும் சாதிப்பது சாதனையல்ல”

Share This Article
Leave a Comment

Leave a Reply