தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ரூ.3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தமிழக முதலமைச்சர் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள 2.27 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்னும் 5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு முழுமையாக விநியோகிக்கப்படும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டும் பொங்கல் பரிசு விநியோகம் மிகவும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், எவ்வித புகார்களுமின்றி அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. “அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி 5 நாட்களில் விநியோகம் நிறைவடையும்” என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிகபட்சமாக ரூ.3,000 வழங்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எங்கள் நோக்கம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் முதல்வர் இந்த மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த உதவிகள் எவ்வித இடைத்தரகர்களுமின்றி நேரடியாகச் சென்றடையும்” என்று கூறினார். மேலும், டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மக்கள் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 33,000 நியாயவிலைக் கடைகள் மூலம் இந்தப் பணிகள் நடைபெற உள்ளன. 2.27 கோடி குடும்ப அட்டைதாரர்களுடன், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

