தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலுவை ஆதரித்துத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக மற்றும் பாஜக உறவைக் கடுமையாகச் சாடிய அவர், வரும் தேர்தலில் திமுக-வின் வெற்றியை உறுதி செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
எடப்பாடி மீது ‘முரட்டு அடிமை’ விமர்சனம்:
பிரச்சாரத்தின் போது பேசிய உதயநிதி, “ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதைப் போல, பிரதமர் மோடிக்கு ஏற்ற அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். முரட்டுப் பக்தர், முரட்டுத் தொண்டனைப் பார்த்திருப்போம்; ஆனால் மோடியின் ‘நம்பர் ஒன்’ முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இவர்களை விரட்டியடிக்க வேண்டிய தேர்தல்தான் இது. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு ‘Out of Control’ என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபிக்கும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
எ.வ.வேலுவின் சாதனைகள்:
அமைச்சர் எ.வ.வேலுவின் பணிகளைப் பாராட்டிய உதயநிதி, “தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்துப் பெருமைமிகு கட்டிடங்களிலும் அண்ணன் எ.வ.வேலுவின் உழைப்பு உள்ளது. கடந்த தேர்தலில் 95,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
திராவிட மாடல் 2.0:
திமுக-வின் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர்:
- வாக்குறுதிகள் நிறைவேற்றம்: 2021-ல் அளித்த 505 வாக்குறுதிகளில் 400-க்கும் அதிகமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
- தொடரும் திட்டங்கள்: புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விடியல் பயணம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் தொடர மக்கள் விரும்புகின்றனர்.
- புதிய அறிவிப்புகள்: மீண்டும் ஆட்சி அமைந்ததும் இந்த உதவித்தொகைகள் அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் Dravidian Model 2.0 ஆட்சி அமையும் என்பது உறுதி என அவர் குறிப்பிட்டார்.

