இந்தியத் தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Poll) வெளியிடுவதற்கான காலக்கட்டத்தைத் தெளிவுபடுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை எந்தவொரு ஊடகமும், நிறுவனமும் கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பொதுவெளியில் பகிரக்கூடாது.
தடை விதிக்கப்பட்டதற்கான காரணம்
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் (முதற்கட்டம்) ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளன. ஒரு மாநிலத்தில் தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் கருத்துக்கணிப்புகள், இன்னும் தேர்தல் நடைபெறாத பிற மாநில வாக்காளர்களின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்ட விதிகள்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் கீழ் (Section 126A), தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இணையதளம், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் என அனைத்து ஊடகங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.
முடிவுகள் எப்போது வெளியாகும்?
மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து, அதாவது மாலை 6.30 மணிக்கு மேல்தான் அனைத்து மாநிலங்களுக்குமான Exit Poll முடிவுகளை ஊடகங்கள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள் மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

