பயிர்க் கடன் பிரச்சினை: சென்னையில் செப்.1 முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்

Priya
765 Views
2 Min Read

தவெக சார்பில் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும், கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் செப்.1 முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்யாத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக, பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகேசன் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், உழவர் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, கிஸான் மஸ்தூர் மோர்ச்சா, தமிழ்நாடு கள் இயக்கம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 15 அமைப்புகள் கலந்துகொண்டன.

கூட்டத்தின் முடிவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தவெக சார்பில் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக்கோரி செப்.1 முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும், காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளோம். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நிபந்தனைகள் விதிப்பது கண்டிக்கத்தக்கது.

தேவையில்லாத, கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பயன்பெறும் திட்டங்களை நீக்கிவிட்டு, ஆடம்பர செலவைக் குறைத்து விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிசெய்யக் கோரினோம். ஆனால், கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. செப்.1 அன்று அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும், 2 ஆயித்துக்கும் அதிகமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபடுவோம். அங்கு அறவழியில் போராட அரசு அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று போராட்டம் நடைபெறும்.

ஏற்கெனவே சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன், எங்களை அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினர். ஆனால், கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த முறை எங்களை யாரும் அப்படி ஏமாற்ற முடியாது என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply