பெண்கள் பாதுகாப்பு: புரட்சித்தலைவி அம்மாவை இழக்கிறோம் – நடிகை கஸ்தூரி ஆதங்கம்!

பெண்கள் பாதுகாப்பு குறைபாடு, பொள்ளாச்சி வழக்கு, மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி.

Siva Balan
1059 Views
2 Min Read
2 Min Read
Highlights
  • தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கஸ்தூரி வேதனை, புரட்சித்தலைவி அம்மாவை இழந்ததாக ஆதங்கம்.
  • பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்பதுடன், திமுக மீது குடும்ப பிரச்சனைகள் குறித்த விமர்சனம்.
  • நிதி ஆயோக் மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது குறித்து அரசியல் கேள்விகள்.
  • 2026 தேர்தலில் தனது முழு பங்களிப்புடன் மோடிக்கு ஆதரவாக செயல்பட உறுதி.
  • தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பது நடக்காத காரியம் என கருத்து.

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வருகை தந்த நடிகை கஸ்தூரி, செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். “தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை மிகவும் இழக்கிறோம். தற்போது பாலியல் வன்கொடுமை என்பது பழகிப்போன ஒரு விஷயமாகிவிட்டது,” என்று அவர் வேதனை தெரிவித்தார். தமிழக அரசின் மெத்தனப்போக்கும், பாரபட்சமான அணுகுமுறைகளுமே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குத் தீர்ப்பு குறித்துப் பேசிய கஸ்தூரி, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பை ஒட்டுமொத்தமாக வரவேற்கிறோம். பொள்ளாச்சி வழக்கை தாங்கள்தான் வெளிக்கொண்டு வந்தோம் என பேசும் கனிமொழி உள்ளிட்ட திமுகவினர், தங்களது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை ஏன் வெளிக்கொண்டு வர மறுக்கிறார்கள்?” என கேள்வி எழுப்பினார். இது, திமுக மீதான நேரடி விமர்சனமாக அமைந்தது.

நிதி ஆயோக் மாநாடு குறித்துப் பேசிய அவர், “நிதி ஆயோக் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகள் இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்காத நிலையில், தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி நிதி ஆயோக் நிகழ்ச்சியில் சந்திக்கிறார் என்றால் இதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து இந்த காலகட்டத்தில் மட்டும் அக்கறை வந்திருக்கிறதா அல்லது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் மேல் அவசர அக்கறை வந்திருக்கிறதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டது போல, தானும் அதே கேள்வியை கேட்பதாக கூறினார். “பிரச்சனை வந்துள்ளது ஆனால் அது நாட்டு மக்களுக்கு இல்லை. அவர்களது வீட்டு மக்களுக்கு தான் பிரச்சனை,” என குற்றம்சாட்டினார். மேலும், முதல்வர் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி பிரதமரை சந்தித்து வருவதாகவும், நீட் உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த திமுக அரசு 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஏன் பிரதமரிடம் இதுகுறித்து இதுவரை பேசவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

வரும் 2026 தேர்தலில் தனது பங்களிப்பு முழு மூச்சுடனும், முழு மனதுடனும் இருக்கும் என நடிகை கஸ்தூரி உறுதிபடத் தெரிவித்தார். “ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றதற்கு பின் முழுமையாக கட்சி சார்ந்த அரசியலுக்கு வந்துள்ளேன். ஒரு ஆன்மீகத்தையும், ஆத்ம தைரியத்தையும் அளிக்கும் பெண்களுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் மோடி அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக செயல்படுவேன்,” என அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். தமிழக வெற்றி கழகம் குறித்துப் பேசிய கஸ்தூரி, “தமிழக வெற்றி கழகத்திற்கு இளைஞர்கள் மத்தியிலும் குறிப்பிட்ட சமுதாயத்தின் மத்தியிலும் நல்ல ஆதரவு இருக்கிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக முதல்வராகவே முடிவெடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்பது நடக்காத காரியம்,” என தனது கருத்தை பதிவு செய்தார்.

- Advertisement -
Share This Article
Leave a Comment

Leave a Reply