வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது பெரும் முறைகேடும் அநீதியும் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில், “ஒரு மாநிலத்தில் நடந்த தவறுக்கு மற்ற அனைத்து மாநில மாணவர்களுக்கும் சேர்த்து தண்டனை தருவது மிகவும் வருந்தத்தக்கது.
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வில் இன்றும் இந்தியா முழுக்க தனியார் பயிற்சி மையங்கள் பெரும் பணலாபம் சம்பாதிக்கின்றன.
தனியார் பள்ளிகள் +2 கல்வியோடு சேர்த்து நீட் கோச்சிங்கிற்கு பல லட்சங்கள் கட்டணமாக வசூலிக்கின்றன.
மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராவதோடு நீட் தேர்வுக்கும் சேர்ந்து தயாராவதால் கல்விச் சுமை,நேரமின்மை தருகிற பதட்டம், தூக்கமின்மை,உடற்சோர்வு, மனச்சோர்வு என அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் பல லட்சங்களை பயிற்சி நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்து விட்டு தவிப்பதும், அது தருகிற அழுத்தத்தை மாணவர்கள் மீது திணிப்பதும், படிக்கிறானா படிக்கிறானா என இடையறாது அவர்களைக் கண்காணிப்பதும், இத்தனை லட்சம் கட்டியிருக்கிறேன் நல்லா படி என்ற முறையீடுகளும் மாணவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் பெரும் மன நெருக்கடிக்கு தள்ளுகிறது.
இதில் போனஸ் அதிர்ச்சியாக வினாத்தாள் கசிவு மாணவர்களையும் பெற்றோர்களையும் பெரும் மன நெருக்கடிக்குள் தள்ளும்.
மொத்த இந்தியாவும் நீட் தேர்வை முறைப்படுத்த ஒன்றிய அரசாங்கத்திற்கு அழுத்தம் தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

