பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு காட்டிய வழியில், தற்போது ஒன்றிய அரசும் நாடு தழுவிய அளவில் இலவச HPV (Human Papillomavirus) தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கவுள்ளது. கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
திராவிட மாடலும் பட்ஜெட் ஒதுக்கீடும்: முதலமைச்சர் Stalin தலைமையிலான திராவிட மாடல் அரசு, 2025-26 நிதிநிலை அறிக்கையிலேயே இதற்காக ₹36 கோடி ஒதுக்கீடு செய்து, கடந்த மாதம் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 3.38 லட்சம் சிறுமிகள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். தமிழக அரசின் இந்த முன்னோடித் திட்டத்தை ஒட்டியே, தற்போது ஒன்றிய அரசும் நாடு முழுவதும் ‘கார்டாசில்’ (Gardasil) வகை தடுப்பூசியைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திட்டம்:
- வயது வரம்பு: 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள்.
- தடுப்பூசி வகை: உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த ஒற்றை டோஸ் ‘கார்டாசில்’ தடுப்பூசி.
- செயல்முறை: Gavi (Vaccine Alliance) உதவியுடன் கொள்முதல் செய்யப்படும் இந்தத் தடுப்பூசிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் இலவசமாக வழங்கப்படும்.
இந்தியாவில் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கருப்பைவாய் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 80,000 பெண்கள் இதனால் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசின் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தற்போது ஒன்றிய அரசு தேசிய அளவில் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

