ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி!

ரூ.500 நோட்டுகள் ரத்து; டிஜிட்டல் பண பரிமாற்றம் – ஊழல் ஒழிப்புக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு யோசனை.

Siva Balan
1091 Views
2 Min Read
2 Min Read
Highlights
  • ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.500 நோட்டுகளைத் திரும்பப் பெற கோரிக்கை.
  • ஊழல் மற்றும் கருப்புப் பண ஒழிப்புக்கு இது உதவும் என வலியுறுத்தல்.
  • டிஜிட்டல் நாணயப் பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
  • கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஊழலை முழுமையாக ஒழிப்பதற்காக ரூ.500 நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றதுபோல, இந்த நடவடிக்கையும் கருப்புப் பண ஒழிப்புக்கு உதவும் என்று அவர் வலியுறுத்தினார். கடப்பாவில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சந்திரபாபு நாயுடு, தனது கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் தெலுங்கு தேசம் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.

“மத்திய அரசுகள் (வெவ்வேறு காலகட்டங்களில்) எடுத்த பல முடிவுகளில் தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ, அதை இந்தியா நாளை நினைக்கும். இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது,” என்று சந்திரபாபு நாயுடு தனது உரையில் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம் மட்டுமே என்றும், அமைப்பு ரீதியாக நாட்டிலேயே வலிமையான கட்சிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த 43 வருடங்களாக தெலுங்கு தேசம் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், கட்சி அழிந்துவிட்டதாகப் பலரும் கூறியபோதும், தெலுங்கு தேசம் கட்சியின் கொடி எப்போதும் உயரே பறந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய நாயுடு, அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று, டிஜிட்டல் கரன்சி முறையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடியிடம் தான் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். “பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்று புதிய ரூ.2,000 நோட்டுகளைக் கொண்டுவந்துள்ளீர்கள். தேவைப்பட்டால் அதிக மதிப்பிலான அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். அதற்கு பதிலாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள், இதனால் கருப்புப் பணத்தை ஒழிக்கலாம்,” என்று பிரதமரிடம் தான் கூறியதை நினைவுகூர்ந்தார்.

- Advertisement -

இன்று இந்தக் கூட்டத்தில் அதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, பல நாடுகள் டிஜிட்டல் கரன்சியை ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார். தற்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு நன்கொடைகளைக்கூட தொலைபேசி மூலம் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும் என்றார். ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.2000 நோட்டுகள் தேவையில்லை என்றும், அரசியலில் வாக்குகளைப் பெற பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். மக்களின் சேவையை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும், திறமையாக உழைத்தால் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற வலியுறுத்திய எனது முடிவுக்கு நீங்களும் ஆதரவு தரவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் ஊழல் முடிவுக்கு வரும்,” என்று சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கை தேசிய அளவில் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply