சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,
“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் முழு நேரமும் ஈடுபட்டு வருகிறோம். பல ஆயிரம் மக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மலிவு விலை உணவகம், ஆம்னி பஸ் ஸ்டாண்ட்
முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்த அமைச்சர்,
“கிளாம்பாக்கத்தில் பயணிகளின் வசதிக்காக மலிவு விலை உணவகம் விரைவில் அமைக்கப்படும். உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாகவும் இருக்கும்.
கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையத்தை மாற்றும்போது கோயம்பேட்டில் 32 கடைகள் இருந்தன. அதன் உரிமையாளர்கள் 11 பேர்தான்.. ஆகவே, கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் மலிவு விலையில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக நான்கு ஏடிஎம்கள் விரைவில் அமைக்கப்படும். பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் 90 சதவிகிதம் வரை அடிப்படை வசதிகளை செய்துகொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்ற செய்தி பயணிகள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.