நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சி எம்பியின் கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது.

சாய் சுக்கிரன் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தம் எடுத்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இதே போல திமுக கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்பியாக இருக்க கூடிய நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனமான எஸ்டி கொரியர் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பல்லாவரத்தில் உள்ள தலைமை அலுவலகத்திலும், ராமநாதபுரத்தில் உள்ள அலுவலகத்திலும் சோதனையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது. எஸ்டி கொரியர் நிறுவனத்தை நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தான் தலைமை இயக்குனராக உள்ளார். நவாஸ் கனியும் நிர்வாக இயக்குனராக உள்ளார். அவருடைய மற்றொரு சகோதரர் சிராஜுதீன் இணை இயக்குனராக உள்ளனர்.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அமலாக்கத்துறை பொறுத்த வரை வெளிநாட்டு பணம் பரிவர்த்தனை தொடர்பாகவும், முறைகேடாக பண பரிமாற்றம் தொடர்பாகத்தான் சோதனை மேற்கொள்வார்கள். அந்த வகையில் எஸ்டிகொரியர் நிறுவனத்தில் நடைபெறும் சோதனையானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த சோதனை திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here