எல்.எஸ்.எஸ். (லவ், ஷேர், சப்ஸ்கிரைப்) – சினிமா விமர்சனம்

Priya
11 Views
2 Min Read

எல்.எஸ்.எஸ் (லவ், ஷேர், சப்ஸ்கிரைப்) என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படம், கல்லூரி காதல், குடும்ப முரண், கடத்தல்–திரில்லர் என பல பாதைகளில் பயணிக்க முயற்சிக்கிறது. சென்னையில் தொடங்கி காசியில் முடியும் இந்தக் காதல் கதையின் மையத்தில் ஆதவ் கிருஷ்ணா – சிம்ரன் அத்வானி ஜோடி.

ஒரே கல்லூரியில் படிக்கும் வடஇந்திய மாணவி சிம்ரனை காதலிக்கும் ஆதவ், ஒழுக்கமும் படிப்பும் மட்டுமே முக்கியம் என வாழும் இளைஞன். அவரது நேர்மை, எளிமை சிம்ரனின் காதலை வலுப்படுத்துகிறது. முதற்பாதி முழுவதும் அவர்களின் காதல் வளர்ச்சி, வீட்டில் அறிமுகம் போன்ற வழக்கமான சம்பவங்களால் நகர்கிறது. இதில் பெரிய புதுமை இல்லாவிட்டாலும், புதுமுகங்களின் இயல்பான முயற்சி கவனிக்கத் தக்கது.

ஆனால் கதை காசிக்கு மாறியதும் சற்று வேகம் பெறுகிறது. தன் தாயிடம் ஆதவை அறிமுகப்படுத்தச் செல்லும் சிம்ரன் திடீரென காணாமல் போகிறார். “என் மகள் எங்கே?” என பணக்கார தந்தை நாயகனை மிரட்ட, படம் காதல் டிராமாவிலிருந்து சஸ்பென்ஸ் திசைக்குத் திரும்புகிறது. கடத்தல் என நினைக்க வைக்கும் திரைக்கதை, பின்னர் விபத்து, கோமா, உடல் உறுப்புகள் கடத்தல் கும்பல் போன்ற சிக்கல்களுக்குள் செல்வது வித்தியாசமாக இருந்தாலும், அதை வலுவாக சொல்லத் தவறுகிறது.

நாயகனாக ஆதவ் கிருஷ்ணா, கேமரா பயமின்றி இயல்பாக நடித்துள்ளார். ஆனால் அவருக்கான ஹீரோயிசம் அல்லது உணர்ச்சி உச்சங்கள் பெரிதாக அமைக்கப்படவில்லை. சிம்ரன் அழகாகத் தோன்றினாலும், இடைவேளைக்குப் பின் அவருக்கு திரைக்கதை இடம் தரவில்லை. நாயகனின் அம்மாவாக வினோதினி வரும் சில காட்சிகள் ஓரளவு ரசிக்க வைக்கின்றன. தம்பி பாத்திரம் கியூட் தருணங்களில் கவனம் ஈர்க்கிறது. சாம்ஸ் வரும் சில காமெடி காட்சிகள் மட்டும் சற்று நிம்மதி தருகின்றன.

காசியை வண்ணமயமாகப் பதிவு செய்த சதீஷ்குமார் ஒளிப்பதிவு படத்தின் பலம். இசை பெரிதாக நினைவில் நிற்கவில்லை. திரைக்கதையில் தேவையான அழுத்தமும், கிளைமாக்ஸில் எதிர்பார்க்கும் தாக்கமும் இல்லாதது பெரிய குறை. காதல்–திரில்லர் கலவையாகத் தொடங்கிய இந்த முயற்சி, மேலும் விறுவிறுப்பான எழுத்தும், உணர்ச்சி ஆழமும் பெற்றிருந்தால் ‘லைக்’ செய்யத்தக்க படமாக மாறியிருக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply