நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல்: “போதைப்பொருள் பயன்படுத்தினேன்… ஆனால்!”

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்; முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி, ஆனால் ஜாமீன் மறுப்பு.

parvathi
1555 Views
2 Min Read
2 Min Read
Highlights
  • நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.
  • முதல் வகுப்பு சிறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • GPay மூலம் ரூ.4.72 லட்சம் போதைப்பொருள் வாங்க பரிவர்த்தனை.
  • ஸ்ரீகாந்தின் ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு முதல் வகுப்பு சிறைக்கான அனுமதி கிடைத்துள்ளது. எனினும், அவரது ஜாமீன் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு அடிதடி வழக்கில், அதிமுக ஐடி பிரிவின் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், பிரசாத்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்த பிரதீப் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். பிரதீப் அளித்த வாக்குமூலத்தில், நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தீங்கர்’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் தேவைப்படுவதாகக் கூறி தன்னிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையின் முடிவில், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார், அவரை இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்த்தனர்.

எழும்பூர் 14-வது பெருநகர நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்தை, அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் சுமார் 40 முறை போதைப்பொருள் வாங்கியதாகவும், அதற்காக பிரதீப்பிற்கு GPay மூலம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

- Advertisement -

போலீஸ் விசாரணையின்போது, போதைப்பொருளை தான் யாருக்கும் விற்பனை செய்யவில்லை எனவும், தனக்காக மட்டுமே பயன்படுத்தியதாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தான் வெளிநாடு செல்ல மாட்டேன் என்றும், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், தனது குழந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், ஸ்ரீகாந்தின் ஜாமீன் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். இதனையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply