‘தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை’! – கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து

'கண்ணகி நகர்' என்றாலே ஒவ்வாமை இல்லை! இந்திய கபடி அணியின் வெற்றிக்குக் காரணமான தமிழச்சி கார்த்திகா-விற்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்தும், அரசுக்கு வைக்கும் கோரிக்கையும்.

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
166 Views
2 Min Read
Highlights
  • ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றதில் தமிழக மாணவி கார்த்திகா முக்கியப் பங்காற்றினார்.
  • சென்னை கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் பயிலும் கார்த்திகா-வுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • "கண்ணகி நகர்" பற்றிய சமூகத்தின் எதிர்மறைப் பார்வையை கார்த்திகா-வின் வெற்றி மாற்றியுள்ளது என்று ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய இளைஞர் விளையாட்டுத் தொடரில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி கார்த்திகா. இவருக்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

” பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு வாழ்த்துகள்.  

கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.

பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவிப்படுத்திவருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.

மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply