தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 7,783 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எழுத்துத் தேர்வு இல்லை என்றும், நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒரு நாளிதழில், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசு 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில், கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு, தற்போது மொத்தம் 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கைக்குள், தேவையான இடத்திற்கு குழந்தைகள் மையங்களை இடமாற்றம் செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை, பயனாளிகளின் வருகை போன்றவற்றை கருத்தில் கொண்டு, முதன்மை அங்கன்வாடி மையத்தினை குறு மையமாகவும், குறு மையத்தினை முதன்மை அங்கன்வாடி மையமாகவும் மாற்றுவதற்கும், திட்டம் சென்றடையாத புதிய பகுதிகளில் புதிய மையங்களை துவக்குவதற்கும், குறைவான பயனாளிகளைக் கொண்டு அருகருகே உள்ள இரு மையங்களை இணைப்பதற்கும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே புதிதாக ஆரம்பிப்பதற்கும், மலைப்பகுதி மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளைக் கண்டறிந்து புதிதாக குறு மையங்களை ஆரம்பிப்பதற்கும் கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.
மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளன என்றும், இந்த மறுசீரமைப்பு இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போதும், தற்போதைய 54,483 குழந்தைகள் மையங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது என அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், தற்போது 7,783 அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது அங்கன்வாடி பணியிடங்களுக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.