இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக் குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக்கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை; அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை; சமூகநீதிக்கு எதிரானவை; தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை; நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோர்ப்போம் என மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக சொல்கிறோம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.