கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது. அப்படி மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது. கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.