எட்டு நாட்களில் 22 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காக்கவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் கடந்த 11-ம் தேதி திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் தொடங்கப்பட்டது.
இதுவரை 8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் முடிவுற்றவுடன், பிற மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 75 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புறஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் செலுத்தப்படஉள்ளது.

