அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு; தமிழக அரசு பணி நியமனங்களின் நிலவரமோ, தற்போது கலவரமாக உருவாகி வருகிறது. முதல்வர் விஜய் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தற்போது அரசு பொறுப்பில் சத்தமில்லாமல் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கோயில் அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினராக, முதல்வர் விஜய்யின் கோட் தயாரிப்பாளர் கேரளாவின் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக விஜய் நடித்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர், கர்நாடகாவின் வெங்கட் நாராயணாவும், முதலமைச்சரின் தனி செயலாளராக, முதல்வர் விஜய் நடித்த லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக விஜய் நடித்த பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் அன்புக்குரியவர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோர் அரசின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவரான திரிஷா மேடத்தை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு தமிழகம் காத்திருக்கிறது.
முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால், இதை எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்? சிலரை பலகாலம், பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு பேசியுள்ளார்.

