மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இந்த நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 16-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதி வரை வட உள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திங்கள்கிழமை காலை எட்டரை மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், சிவகங்கை மாவட்டம் வேதியரெண்டலில் 5 சென்டி மீட்டர் மழையும், திருச்செந்தூர், அருப்புக்கோட்டை, சோழவந்தானில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

