தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 27-ம் தேதி வரை மதுரை உள்ளிட்ட 7 மாட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 24) மற்றும் நாளை மறுதினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27 முதல் 29-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை முதல் 27-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாகவும், இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வழக்கமான அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கீழ்கோத்தகிரி எஸ்டேட், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தலா 2 செமீ, சேலம் மாவட்டம் மேட்டூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, தாமரைப்பாக்கம், ஆர்.கே.பேட்டை, திருச்சி மாவட்டம் மருங்காபுரி, நீலகிரி மாவட்டம் பந்தலூர், மேல் கூடலூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், திருவள்ளூர், சோழவரம், பூண்டி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

