மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூன் 29, 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். அந்த வகையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூன் 29, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அனைத்து துறைகளின் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அமைந்து பல்வேறு துறைகளின் அதிகாரிகள் சமீபத்தில் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
மாநாட்டில், மாவட்ட நிர்வாகம், சட்டம்- ஒழுங்கு நிலை, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், திட்டங்களை செயல்படுத்தும் நடைமுறைகள், அரசு நிர்வாகத்தில் புதிய தொழில்நுட்ப பயன்பாடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் விஜய் விரிவான ஆய்வு மேற்கொள்வார். அத்துடன், திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் அப்போது முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

