ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக, அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களில் தங்களுக்கு சாதகமானவர்களுக்கு பணி நீட்டிப்பை வழங்கினார்கள்.
இதனால், சீனியர் மருத்துவர்களுக்கு முறையான பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
ஓய்வு பெற்றவர்கள் உயர் பொறுப்புகளில் வரும்போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அதேநேரம், அரசு மருத்துவர்கள் அரசுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு, கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை, தவெக அரசு செய்யாது என்று நம்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

