“காரைக்காலுக்கான காவிரி நீர் பங்கு கிடைக்க உரிய நடவடிக்கை” – முதல்வர் ரங்கசாமி உறுதி

Priya
17 Views
1 Min Read

காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் பங்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் அமைச்சராக பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவை சட்டப்பேரவையில் உள்ள அவரது அறை இருக்கையில் முதல்வர் ரங்கசாமி இன்று அமர வைத்தார். அவரது அறையில் இருந்த சாமி படங்களுக்கு தீபம் காட்டி முதல்வர் பூஜை செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறியது: “அமைச்சர்கள் இலாகா ஒதுக்காததால் பணிகள் முடங்கியுள்ளதாக கேட்கிறீர்கள். அரசு பணிகள் ஏதும் முடக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் நடக்கிறது.

தினமும் 20 கோப்புகளில் கையெழுத்திட்டு அனுப்புகிறேன். அடுத்த வாரத்தில் அமைச்சர்கள் நியமனம் இருக்கலாம். விரைவில் பேரவைத் தலைவர் யார் என்பது தெரியும்.

பேரவைத் தலைவர் தேர்தல், அமைச்சரவை விரிவாக்கம் ஆகியவை உங்களிடம் சொல்லிவிட்டுதான் செய்வேன். நியமன எம்எல்ஏக்களை பாஜக கேட்பதால்தான் இந்த தாமதமா என கேட்கிறீர்கள். அதுபோல் ஏதும் இல்லை.

பிரெஞ்சு மொழி பள்ளிகளில் நீடிக்க மத்திய அரசை கேட்டுள்ளேன். மீண்டும் வலியுறுத்துவேன். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கேட்கிறீர்கள். காரைக்காலுக்கு உரிய காவிரி நீர் கிடைக்க எப்போதும் புதுச்சேரி அரசு வலியுறுத்தும். காவிரி நீரை கேட்டு பெறுவோம். தமிழக அரசிடமும் கேட்போம். அவர்களும் தருவார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் உரிய பங்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply