2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் நாகநாதன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கானதல்ல, மாறாகத் தமிழ்நாட்டின் ஆன்மாவைத் தீர்மானிக்கும் தேர்தல் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில உரிமைகளே பிரதானம்
“இந்தத் தேர்தல் தமிழகத்தின் State Rights எனப்படும் மாநில உரிமைகளுக்கான தேர்தல். நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையான தமிழ் மொழியை யார் பாதுகாப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும் போராக இது அமைந்துள்ளது. ஒருபுறம் மதவாத சக்திகளும், மறுபுறம் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் திராவிட மாடல் அரசும் களத்தில் உள்ளன. இதில் மக்கள் தெளிவான முடிவை எடுத்துவிட்டார்கள்” என எழிலன் தெரிவித்தார்.
வெற்றி இலக்கு
திமுக கூட்டணியின் பலம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களே தங்களின் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும் என்றார். “திமுக தலைமையிலான கூட்டணி வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்று, மீண்டும் ஒருமுறை திராவிட மாடல் ஆட்சியை அரியணையில் அமர்த்தும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மதவாதத்திற்கு எதிரான குரல்
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைகளை ஒன்றிய அரசுக்கு அடகு வைக்கத் துடிக்கும் சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். நீட் விலக்கு, கல்வி உரிமை மற்றும் நிதிப் பகிர்வு போன்ற விவகாரங்களில் மாநில உரிமைகளை மீட்க திமுக மட்டுமே குரல் கொடுத்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

