ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்: ஈரான் அரசு அனுமதி..!

Priya
10 Views
2 Min Read

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த எரிபொருள் தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக, ஹார்முஸ் (Hormuz) நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பயணிக்க ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக அந்தப் பகுதியை ஈரான் மூடியிருந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் ராஜதந்திர முயற்சியால் இந்தச் சிக்கல் நீங்கியுள்ளது.

அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் தொடர்பான மோதலில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடைத்தது. இதனால் அரபு நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு (LPG) விநியோகம் முற்றிலும் தடைபட்டு, கடந்த 10 நாட்களாக நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது.

இந்த இக்கட்டான சூழலில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சியுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஈரான் அரசு, தற்போது ‘புஷ்பக்’ (Pushpak) மற்றும் ‘பரிமள்’ (Parimal) ஆகிய இரண்டு இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதியின் மூலம், அரபு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்க உள்ளது. இது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு உடனடித் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஈரான் தொடர்ந்து நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதை உறுதி செய்துள்ளதன் மூலம், முடங்கிக் கிடந்த சர்வதேச விநியோகச் சங்கிலியில் இந்தியாவுக்கு மட்டும் விலக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் இந்தியாவில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எண்ணெய் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply