நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து சினிமா வட்டாரமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. அந்த வகையில் விஷாலும் அரசியல் கட்சி தொடங்குவார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக, உங்களில் ஒருவனாக அந்தஸ்தும், அங்கீகாரமும், அளித்த தமிழக மக்களுக்கு, என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாக கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு’ என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்ததுடன், என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க ‘மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல்கலாம்’ அவர்களின் பெயரில் வருடம் தோறும் பல எண்ணற்ற ஏழை, எளிய மாணவ,மாணவிகளை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அது மட்டுமின்றி படபிடிப்புக்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்ததில்லை ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவனின் வாக்குப்படி, என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே தான் இருப்பேன் அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் ” என்று நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு நடிகர் விஷால் ஏற்கனவே ஆர்.கே. நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அப்போதே அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here